திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஸ்பெயின் உள்நாட்டுப் போரின்போது 1938-ல் வெளியிடப்பட்ட 10 சென்டிமோஸ் எஸ்பெஷியல் மோவில் "முத்திரைப் பணம்" கொண்ட ஒரு நாணய வட்டு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்து பேசுகையில்,
நாணயங்கள், பணத்தாள்கள் போன்ற பரிமாற்ற ஊடகங்களைச் சேகரித்தல், ஆய்வு செய்தல் மற்றும் அவற்றின் வரலாற்றை ஆராயும் அமைப்பு ஆகும். இது நாணயங்களின் உற்பத்தி, உலோகத் தன்மை, அவை புழக்கத்தில் இருந்த காலத்தின் வரலாறு பொருளாதார, சூழலை அறிந்து கொள்ள வழிவகை செய்கிறது என்றார். உலகநாடுகள் பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி,சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், வரலாற்று ஆர்வலர் அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் பேசுகையில்,ஸ்பெயினின் உள்நாட்டுப் போரின்போது சுமார் 1938-ல் வெளியிடப்பட்ட 10 சென்டிமோஸ் எஸ்பெஷியல் மோவில் "முத்திரைப் பணம்" கொண்ட ஒரு நாணய வட்டு ஆகும். ஸ்பெயின் அவசரகால முத்திரை அட்டை நாணயம் என்பது சுமார் 35 மில்லிமீட்டர் விட்டமும் ஏறத்தாழ 0.5 கிராம் எடையும் கொண்ட, அட்டையால் ஆன ஒரு வட்டு வடிவப் பணத்தாள் ஆகும். இது, ஸ்பானிய உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் நிலவிய உலோகங்களின் (குறிப்பாக வெள்ளி மற்றும் செம்பு )தொடர்ச்சியான பற்றாக்குறையைத் தணிக்கும் முயற்சியாக, இரண்டாம் ஸ்பானியக் குடியரசின் அரசாங்கத்தால், பார்சிலோனாவில் 24 பிப்ரவரி 1938 அன்று வெளியிடப்பட்ட ஓர் அமைச்சக உத்தரவின் பேரில், ஃபேப்ரிகா நேஷனல் டி மோனெடா ஒய் டிம்ப்ரே நிறுவனத்தால் தற்காலிக அடிப்படையில் வழங்கப்பட்டது. இதனால்தான் அவசரகால நாணயம் என்று கருதப்படுகிறது. இதன் பின்பக்கத்தில் குடியரசின் தேசிய சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இதன் முன்பக்கம் ஒரு முத்திரையைப் பதிப்பதற்காக வெற்று இடமாக விடப்பட்டுள்ளது.10 சென்டிமோவிற்கும் முத்திரை ஒட்டுவதன் மூலம் அதன் மதிப்பை தீர்மானிக்கிறது.அவை, அஸ்பே (அலிகாண்டே) நகரில் உள்ள தொழிற்சாலை என்று அறியப்பட்ட ஃபாப்ரிகா நேஷனல் டி மோனெடா ஒய் டிம்ப்ரே (தேசிய நாணயச்சாலை மற்றும் முத்திரைத் தொழிற்சாலை) வளாகத்தில் அச்சிடப்பட்டன. அவற்றின் ஆரம்பகால தற்காலிக தன்மை இருந்தபோதிலும், உள்நாட்டுப் போர் முடியும் வரை, குறிப்பாக ஜூன் 9 ஆம் தேதியிட்ட ஆணைப்படி ஜூலை 15,1939 வரை அவை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படவில்லை. அதாவது, எதிரியால் புழக்கத்தில் விடப்பட்ட அனைத்து காகிதப் பணமும் திரும்பப் பெறப்பட்ட அதே நேரத்தில் அவை புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டன. ஏனெனில், போரின் போக்கைக் கருத்தில் கொண்டு,அவற்றை பயனற்றதாக்கும் மற்றொரு மாற்றுப் பண முறையை நிறுவுவது சாத்தியமாகவில்லை. என்றார்.


0 Comments