திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் மேலாளர், பெண் பணியாளர் மற்றும் கோயில் நிர்வாகத்தைக் குறிவைத்து திட்டமிட்டு இணையவழியில் அவதூறு பரப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட முன்னாள் பணியாளர்களுடன் கூட்டு சேர்ந்து, பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவித்து ஆபாச மிரட்டல் விடுத்த லாரி ஓட்டுநரான போலி நிருபர் மீது பேரளம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பேரளம் அருகே உள்ள கோவிந்தசேரி வடக்குத் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் மதன்மோகன் (வயது 40). லாரி ஓட்டுநரான இவர், தன்னை ‘மயிலை மதன்மோகன்’, பிரபல யூடியூபர் மற்றும் சென்னை 'ரிப்பன் மாளிகை செய்தியாளர்' எனப் போலி அடைமொழிகளுடன் அடையாளப்படுத்திக் கொண்டு அரசு அலுவலர்களை மிரட்டி வந்துள்ளார்.கடந்த 2026 மார்ச் மாதம் திருப்பாம்புரம் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்த மதன்மோகன், மூலவர் சன்னதிகளில் வீடியோ எடுக்க முயன்றுள்ளார். அங்கு பணியில் இருந்த அர்ச்சகர்கள் ஜி.பிரேம்குமார் மற்றும் வி.கௌரிசங்கர் ஆகியோர் அடையாள அட்டையைக் கேட்டபோது, அதைக் காட்ட மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோயில் மேலாளர் கே.வள்ளிகந்தன் அனுமதி பெற வேண்டும் எனக் கூறியதற்கு, அவதூறாகப் பேசிவிட்டு வெளியேறியுள்ளார்.
திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகங்களில் விசாரிக்கப்பட்டதில், மதன்மோகன் செய்தியாளரே இல்லை என்பது உறுதியானது. இவர் செய்தியாளர் என்ற பெயரில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு பணம் பறிப்பதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருப்பது அம்பலமானது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இத்திருக்கோயிலில் நிர்வாகக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியதால் பாதிக்கப்பட்ட சில முன்னாள் பணியாளர்கள் மதன்மோகனுடன் கூட்டணி அமைத்துள்ளனர்.
மணியம் அருள்ராஜ் முறைகேடு மற்றும் மதுபோதையில் பணிக்கு வந்தது போன்ற புகார்களின் பேரில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, மதுரை பாலதண்டாயுதபாணி கோயிலுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர். இவர் பழிவாங்கும் நோக்கில் மதன்மோகனைத் தூண்டிவிட்டுள்ளார்.
திருவலகு பணியாளர் வசந்தகுமாரி, கோயில்கந்தன்குடி அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயிலில் பணியைச் சரிவர செய்யாதது, அர்ச்சகரை அவதூறாகப் பேசியது மற்றும் மண்டபத் திருமணங்களில் கட்டாயப் பணம் கேட்டது தொடர்பாக ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டவர். கோயில் நுழைவாயில் கடைகள் பொது ஏலத்திற்கு விடப்பட்டதால் ஆத்திரமடைந்து அதிகாரிகளுக்கு எதிராகச் செயல்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டார்.
கூத்தனூர் மகாசரஸ்வதியம்மன் கோயிலில் பணிபுரிந்தபோது நிதி கையாடல் புகாரில் சிக்கி இடமாற்றம் செய்யப்பட்ட இவர், தன் மீதான புகார்களைத் தீர்த்து வைக்குமாறு மேலாளரிடம் கோரியுள்ளார். மேலாளர் மறுத்ததால், மதன்மோகனுக்குப் பண பலம் அளித்து கோயில் நிர்வாகத்தை மிரட்டப் பின்னணியாக இருந்துள்ளார்.
பழிவாங்கும் நோக்கோடு ஒன்றுதிரண்ட இந்தக் கும்பல், கூகுள் தேடுபொறி மற்றும் 'ChatGPT' போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருட்களைப் பயன்படுத்தி, பத்திரிகை செய்தி போன்ற தோற்றத்தில் கலர் போஸ்டர்களை உருவாக்கினர். இப்போலிச் செய்திகளை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வழியே திட்டமிட்டுப் பரப்பி, மேலாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தினர்.
இதன் உச்சக்கட்டமாக, திருக்கோயில் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த ஒரு பெண் ஊழியரையும் மேலாளரையும் இணைத்து மதன்மோகன் ஆபாசப் பேச்சுக்களைப் பரப்பியுள்ளார். அந்தப் பெண்ணின் பெண்மைக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் மற்றொரு நபருடன் தொலைபேசியில் கொச்சையாகப் பேசிய உரையாடலைப் பதிவு செய்து வாட்ஸ்அப்பில் வைரலாக்கினார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கோயில் பணியாளர்கள் கடந்த 27-08-2026 அன்று பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்த மதன்மோகன் தலைமறைவானார். இந்நிலையில், கடந்த 05-09-2026 அன்று மேலாளர் வள்ளிகந்தனைத் தொடர்பு கொண்ட மதன்மோகன், பெண் ஊழியரை இழிவுபடுத்திப் பேசியதுடன், மேலாளரின் தாயாரையும் கொச்சையான வார்த்தைகளால் திட்டி கொலை செய்துவிடுவதாக வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.
தொடர் மிரட்டல்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவுவதால், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி அலுவலகத்தில் மேலாளர் கே.வள்ளிகந்தன் புகார் அளித்துள்ளார்.
தலைமறைவாக உள்ள போலி நிருபர் மதன்மோகனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவதூறு பரப்பத் தூண்டிய முன்னாள் பணியாளர்கள் மற்றும் செயல் அலுவலர் மீது துறை ரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்கோயில் நிர்வாகத்தின் கண்ணியத்தைப் பாதுகாத்து ஊழியர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள.



0 Comments