திருச்சி தென்னூரில் பழமைவாய்ந்த தர்கா மற்றும் அடக்கஸ்தலத்தை சேதப்படுத்தி ஆக்கிரமிக்க முயற்சிக்கும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்....
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திருச்சி மாநகரின் மையப் பகுதியான தென்னூரில் உள்ள மாதுளங்கொல்லை என்கிற அனார் பாக் தர்கா மற்றும் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் விதமாக அங்குள்ள பழமையான தர்காக்கள் மற்றும் கபரஸ்தான்களை இன்று (ஜன.01) அதிகாலை இடித்து சில சமூக விரோதிகள் தரைமட்டமாக்கியுள்ளனர். ஆக்கிரமிப்பாளர்களின் சமூக விரோத நடவடிக்கைக்கு காவல்துறையை சேர்ந்தவர்களும் துணைபோயுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த செயலை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஹஜ்ரத் சையத் குத்புதீன் ஷா, ஹஜரத் ஷா பாபா சையத் குத்புதீன் கிப்லா காதிரி மற்றும் ஷா பாபா சையத் கமருதீன் கிப்லா காதிரி உள்ளிட்ட மகான்கள் அடக்கமாகியிருக்கும் அன்னா பாக் தர்கா பகுதி மற்றும் அதனையொட்டி அமைந்துள்ள இஸ்லாமியர்களின் அடக்கஸ்தல பகுதி ஆகிய 2.15 ஏக்கர் பகுதியும் வக்புக்கு சொந்தமான பகுதியாகும்.
இந்நிலையில், திருச்சியின் மிகமுக்கியமான மையப்பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடந்துவருகின்றன. இஸ்லாமிய கூட்டமைப்பினர் இந்த முயற்சியை அவ்வப்போது தடுத்துவரும் வேளையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களுடன் மீண்டும் ஆக்கிரமிக்கும் வேளைகளில் காவல்துறை உதவியுடன் சிலர் ஈடுபட்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 Comments