ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்த ஜுனைத் மற்றும் நஸீர் என்கிற இரு முஸ்லிம் இளைஞர்களை எரித்துக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பீமநகர் ரபீக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் தற்போது வரை முஸ்லிம்களுக்கு எதிராக வன்கொடுமைகளும், படுகொலைகளும் தொடர்ந்து நடைபெற்றும் வரும் சூழ்நிலையில் கடந்த 15 - 02 - 2023 அன்று ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்த ஜுனைத் மற்றும் நஸீர் என்கிற இரு முஸ்லிம் இளைஞர்களும் டீ கடையில் நின்றுக்கொண்டிருந்த போது மோனு மனேசர் என்கிற தலைமையில் திடீரென வந்த பஜ்ரங்தள் அமைப்பின் பயங்கரவாத குண்டர்கள் அந்த இளைஞர்களை காரணமின்றி தாக்கி இளைஞர்களின் வாகனத்திலேயே அவர்களை கடத்தி ஹரியானா மாநிலத்துக்குக் கொண்டுச் சென்று வாகனத்துக்குள்ளேயே பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுள்ளனர்.
இந்த மனிதாபிமற்ற செயல் இவர்களுடைய மதவெறியை காட்டுகிறது. முஸ்லிம்களை கொன்று குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவர்களுடைய அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதை பாஜக கும்பல் ஊக்குவிக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது.
மேலும் மத்தியில் ஆளக்கூடிய ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பும், காவல்துறையின் ஆதரவு இல்லாமல் இப்படிப்பட்ட பயங்கரமான கொடுஞ்செயலை இவர்கள் தொடர்ந்து செய்ய முடியாது என்பதே நிதர்சனம். எனவே மதவெறியை தூண்டும் பாஜக அரசை கண்டிப்பதோடு, இது போன்ற பயங்கரவாத செயலில் ஈடுபட்ட கயவர்களை உடனடியாக கைது செய்தும், இவர்களது அமைப்பை தடைசெய்ய வேண்டும் என முஸ்லிம்களின் சார்பாக யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பீமநகர் ரபீக் தமது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
0 Comments