பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பத்தாண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில், திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமையகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் மீனாட்சி நித்திய சுந்தர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார், அதில்:--
நமக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இதுவரை 15 பிரதமர்கள் நாட்டை ஆட்சி செய்துள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மோடியின் 12 ஆண்டு கால ஆட்சி என்பது வரலாற்றுச் சாதனை ஆகும். ஒரு சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் நாட்டின் பிரதமராக உயர்ந்திருக்கிறார் என்றால், அது மக்கள் அவர் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது. கடந்த 12 ஆண்டுகளில் மோடியின் சாதனைகளைப் பார்த்துதான் மக்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை வழங்கி வருகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக வரிப் பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவி மானியம் 341.7% அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ₹506 கோடி வழங்கப்பட்டுள்ளதுடன், ஆண்டுதோறும் தமிழகத்தின் பொருளாதாரம் உயர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. திருச்சியின் வளர்ச்சிக்கு மட்டும் ₹5,650 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலைகள், உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் கல்லூரிகளை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களுக்குப் பெருமளவில் நிதி ஒதுக்கப்பட்டு, மாநிலம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. வந்தே பாரத் ரயில் சேவை, 77 ரயில் நிலையங்கள் புதுப்பித்தல், மெட்ரோ ரயில் திட்டம், சர்வதேச விமான நிலைய மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்தலங்களை மேம்படுத்துதல் என நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து முக்கியப் பணிகளையும் மத்திய அரசு செய்துள்ளது.
தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு எந்தத் தாமதமும் செய்யவில்லை. ஏதேனும் நிர்வாக ரீதியிலான காரணங்களால் மட்டுமே அது தள்ளிப் போகிறது.நிகழ்காலச் சூழலைக் கருத்தில் கொண்டு, மும்மொழி எதிர்ப்பைத் தாண்டி நாம் சிந்திக்க வேண்டும். தமிழகத்தில் வெறும் மொழி அரசியல் மட்டுமே நடத்தப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் நாம் பல மொழிகளைத் தெரிந்து கொள்வது அவசியமானது.பாஜகவின் வளர்ச்சி என்பது தனிமனிதனைச் சார்ந்தது அல்ல. கட்சி வளர்ச்சியில் சில தடைகள் வரலாம். ஆனால், தன் உயிரையே தியாகம் செய்த தியாகிகளால் உருவான கட்சி இது. அண்ணாமலை அவர்களின் இயக்கத்தில் இருந்து சிலர் வெளியேறியிருக்கலாம், ஆனால் அது கட்சிக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி வருத்தமளித்தாலும், இனிவரும் காலங்களில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திப்போம்; அடுத்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.நாங்கள் அண்ணாமலையை இழக்கவில்லை. அண்ணாமலை தான் பாஜகவில் இருந்துள்ளார். அவருக்குத்தான் தற்போது கட்டம் சரியில்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் பாஜக கூட்டணி மிகவும் வலுவாகவும் நிலையாகவும் உள்ளது என்றும், வரும் நாட்களில் மேலும் பலர் பாஜகவில் இணைவார்கள் என்றும் உறுதியுடன் தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது ஸ்டிக்கர் ஒட்டும் அரசியல் மட்டுமே நடந்து வருவதாகவும் அவர் சாடினார்.





0 Comments