திருச்சியில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
கர்நாடகாவும், கேரளாவும் தமிழக மக்கள் குடிப்பதற்கும், விவசாயிகள் விவசாயம் செய்வதற்கும் தண்ணீர் தர மறுத்து மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரை வீணாக கடலில் விடுகிறார்கள்.
தமிழகத்தில் காவிரி, கொள்ளிடத்தில் உள்ள மணலை அள்ளி கேரளா, கர்நாடகத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்பவர்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது என்றும், காவிரி, கொள்ளிடத்தில் லாரி மூலமாக மணல் அள்ளி சென்று நிலத்தடி நீர் மட்டத்தை கீழே கொண்டு செல்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மணலை காக்கும் உரிமை மீட்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ்க்கு மட்டும் வழிவிட்டு விவசாயிகள் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் சிவராசு விவசாயிகளின் மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் விவசாயிகள் தங்களது போராட்டத்தினை கைவிட்டனர்.
இந்த சாலை மறியலால் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
0 Comments