திருச்சி மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் பனை விதை விதைப்பு நிகழ்ச்சி பொன்மலையில் இன்று நடைபெற்றது.மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர், தண்ணீர் கே.சி. நீலமேகம் தலைமையில் தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார் , தண்ணீர் அமைப்பு நிர்வாகக் குழு ஆர்.கே.ராஜா, கே.கே.பாய்ஸ் குமரன், மே.க.கோட்டை தினேஷ் , சாமி தற்காப்பு கலைக்கூடம் வைத்தியார் டி. ஜீவானந்தம் உட்பட பல தன்னார்வலர்கள் பனை விதை விதைப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
பனை விதை விதைப்பு நிகழ்வு குறித்து :
தமிழர்களின் மரம் என கொண்டாடப்படும் பனை மரத்தை பாதுகாக்கும் வகையில் பனை விதை விதைப்பு பணியினை பொன்மலை ரயில்வே மைதானம் பகுதியில் விதைத்துள்ளோம்.
நீர்பிடிப்பு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க ஆற்று ஓரங்களிலும், குளங்களின் கரையிலும், வாய்க்கால் கரையிலும் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க பனை மரவிதைகளை விதைத்து வருகிறோம்.
இன்றைய இளைய தலைமுறையினர் பனையின் பயன்கள் மற்றும் பனை பொருள்களில் உள்ள சத்துக்கள் குறித்தும், மருத்துவகுணம் பற்றியும் அறியாமல் உள்ளனர். அவர்களிடம் பனை பொருள்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.
ஒரு பனை மரம் ஆண்டுக்கு 150 லிட்டர் பதநீர், ஒரு கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை தருகிறது. ஒரு பனை மரத்தில் இருந்து 24 கிலோ பனைவெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவை கிடைக்கின்றன.
இயற்கை நமக்குத் தந்த பெரும் கொடைகளில் ஒன்று பனைமரம். தண்ணீரே இல்லாத இடத்தில் கூட வளரும் அந்த மரம் மனிதர்களுக்கு சலிப்பின்றி பலன் தரக்கூடியது. எனவே, நாம் அனைவரும் பனை மரம் வளர்க்கும் பணியில் முடிந்தவரை ஈடுபடுத்திக் கொள்வோம்.
வருங்காலங்களில் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பல இடங்களில் தன்னார்வலர்களை கொண்டு பனை விதைகளை சேகரிப்பதும் , பனைவிதைகளை விதைப்பதும் என திட்டமிட்டுள்ளோம்.
இந்த நிகழ்வுவிற்கு மக்கள் சக்தி இயக்கம் தினேஷ், சீனிவாசன், இளங்கோ தண்ணீர் அமைப்பு குமரன், கார்த்தி, ஸ்ரீ ,வெங்கடேஷ் ராஜா, மற்றும் பலர் கலந்துக் கொண்டு விதைத்தார்கள்
0 Comments