உலக இதய தினத்தையொட்டி, திருச்சி அப்போலோ மருத்துவமனையின் சார்பில் ஹார்ட்ட பாத்துக்கோங்க என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள், இதய நோய்க்கு சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இந்த நடைபயணத்தில் திரளாகக் கலந்துகொண்டனர்.
மூத்த மருத்துவர் அஷ்ரஃப் பேசுகையில், இதயத்தை நலமாகப் பேணுவது குறித்தும், மேலும் இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.
திருச்சி காவல்துறை ஆணையர் அலுவலகத்திலிருந்து இந்த நடைபயணம் துவங்கியது. 400க்கும் மேற்பட்டோர் இந்த நடைபயணத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதய ஆரோக்கியத்தின் அவசியத்தை வெளிப்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் பலர் ஏந்திவந்தனர்.
உலக இதய தினத்தில், இதய ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வைப் பரப்பிட இந்த நடைபயணம் ஒரு நல்வாய்ப்பாக அமைந்ததாகவும், இதன் மூலம் பொதுநலனுக்கு ஒரு சிறிய பங்களிப்பை திருச்சி அப்போலோ வழங்கியுள்ளதாகவும், தொடர்ந்து இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றும் திருச்சி அப்போலோ மருத்துவமனை இதயப் பிரிவு தலைவர் மற்றும் மூத்த பொதுமேலாளர் சாமுவேல் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளித்த விருந்தினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
டெல்டா பகுதியில் பிறவி இதயக் கோளாறுடன் குழந்தைகள் பிறப்பது அதிகமாகக் காணப்படும் பகுதியாக உள்ளதாகவும், அத்தகைய குழந்தைகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு நமது அரசு திறன் மிக்க நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் சிறப்பு சிகிச்சை பிரிவு நிர்வாகி டாக்டர் சிவம் தெரிவித்தார். திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனைத்து உடலியல் பிரச்சனைகளுக்கும் சிறப்பான சிகிச்சை அளிப்பதாகவும், அதிலும் குறிப்பாக இதய நோய் பிரிவைப் பொருத்தவரை பிறப்பிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான மற்றும் வெகுசிறப்பான சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதய நோய் மருத்துவர்கள் காதர், ரவீந்திரன், ஷ்யாம் சுந்தர், இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ரீகாந்த், இதய சிகிச்சை மயக்க மருந்தியல் மருத்துவர் சரவணன், டாக்டர் ரோகிணி ஆகியோர் தற்போதைய வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினர்.
திருச்சி அப்போலோ துணைப் பொது மேலாளர் சங்கீத் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உடனிருந்தார்.
0 Comments