திருச்சியில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் பித் அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநில மாநாடு - நீதிபதிகள் நியமனத்தை அரசியலாக்கும் பா.ஜ.க அரசின் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று நடைபெற்றது. பித் அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு என்கிற தலைப்பில் நடந்த இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாடு குறித்து பேசிய அந்த அமைப்பின் மாநில தலைவர் சுலைமான்,
முஸ்லிம் சமுதாயத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் வகையில் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட்டது
பாபர் மசூதியை இடித்தார்கள் தற்போது ஞானவாபி மசூதியை இடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் பொது சிவில் சட்டங்களை அமல்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்கள். இந்த சூழலில் முஸ்லீம்களுக்கான உரிமைகளை பறிக்க கூடாது. ஒன்றிய அரசு முஸ்லீம்களை அச்சுறுத்த கூடாது, முஸ்லீம் விரோத போக்கை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது என்றார்.
இந்த மாநாட்டில் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. அதனை ஏராளமானோர் கண்டு அறிந்து கொண்டனர்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாசார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பல ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும், கொலிஜியம் முறையில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் நியமனத்தை வேண்டுமென்றே தாமதம் செய்து பல சிறந்த நீதிபதிகளை பதவி உயர்வு பெற முடியாமல் தடுத்து வருவது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும். நீதித்துறையை அரசியலாக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசின் இத்தகைய முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
0 Comments