திருச்சியில் செயல்பட்டு வரும், டாக்டர் சாலை ஜெ.கே. உலகளாவிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், சித்த மருத்துவம், வர்மம் மற்றும் தொக்கணம் ஆகிய பாரம்பரிய கலைகளுக்கான பயிற்சி நிறைவு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா திருவானைக்காவலில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா, இலங்கை, அமெரிக்கா, ஜெர்மனி, மலேசியா, ஸ்வீடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் கலந்துகொண்டனர். சர்வதேச அளவில் பாரம்பரிய மருத்துவ முறைகளை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பயிற்சி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிறுவன இயக்குனர் டாக்டர் சாலை மருதமலை, சித்த மருத்துவத்தின் பாரம்பரியம் மற்றும் அதன் அறிவியல் அடிப்படைகளை விளக்கி வரவேற்றார். நிறுவனர் சாலை ஜெய கல்பனா அறிமுக உரையாற்றினார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாக்டர் அஸ்கர் வாழ்த்துரை வழங்கினார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை துணைத்தலைவர் குபேந்திரன் மற்றும் தொலைதூரக் கல்வி மையத்தின் இயக்குநர் தாமரை செல்வி ஆகியோர் 11 நாடுகளை சேர்ந்த சர்வதேச மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர். இலங்கை, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் மலேசியாவைச் சேர்ந்த மருத்துவர்கள், வர்மக்கலை குறித்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனத்தின் நிறுவனர் சாலை ஜெயகல்பனா கூறியதாவது:--உலகம் முழுவதும் வர்மம் மற்றும் சித்த முத்திரை கலைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 400-க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். நமது பாரம்பரிய மருத்துவ முறைகள், மக்கள் தங்களைத்தாங்களே சரிசெய்துகொள்ளும் வகையில் எளிமையானதாக இருப்பதால், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. மேலும், சமையலறையில் பயன்படுத்தும் மூலிகைகளின் மகத்துவத்தை அனைவரும் அறிய வேண்டும். வர்மக்கலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதற்காகத் தமிழக அரசு இக்கலைக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம். தமிழகத்தில் மட்டும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் மனநலம் மற்றும் உடல் நலத்திற்காகச் சித்த முத்திரைகளைக் கற்று வருகின்றனர் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகப் பங்கேற்றனர். நிறைவாக வாணி, மாலதி நன்றி கூறினார்.




0 Comments