கர்நாடகா மாநிலம் உடுப்பி மகாத்மா காந்தி நினைவு கல்லுாரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதை கண்டித்து ஹிந்து ஜகரானா வேதிகே அமைப்பை சேர்ந்த சில மாணவிகள் காவி ஷால் அணிந்து கல்லூரிக்குள் நுழைந்தனர். ஹிஜாப் அணிந்துள்ள மாணவிகள் அதை அகற்ற கோரிக்கை வைத்தனர்.
கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மாணவிகள் ஹிஜாப்பை அகற்றினர். இதன் தொடர்ச்சியாக பல இடங்களில் சர்ச்சை உருவானது. குந்தாப்புரா அரசு பி.யூ. கல்லுாரி, பஸ்ரூரில் உள்ள சாரதா கல்லுாரி, பைந்துார் அரசு ஜூனியர் கல்லுரியிலும் ஹிஜாப், காவி ஷால் அணிதல் தொடர்பான பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து உடுப்பியை சேர்ந்த மாணவிகள் பெங்களூருவில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வர தடை விதித்துள்ள கர்நாடகா பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் குலாம் தஸ்தகீர் தலைமை தாங்கினார். இதில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் கோவை ரஹ்மத்துல்லாஹ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
0 Comments