திருச்சி பிஷப் கீப்பர் கல்லூரி சமூகப் பணித்துறை மற்றும் யூத் ரெட் கிராஸ் குழு இணைந்து திருச்சி புத்தூரில் உள்ள ஆல் செயின்ட்ஸ் தொடக்கப்பள்ளி “குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்ச்சியில் திருச்சி நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கௌசல்யா, பிஏ பிஎல்., சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழிப்புணர்வு உரையாற்றினார். மேலும் ஆல் செயின்ட்ஸ் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.சுதா செல்கிரிம் தலைமையேற்று தலைமை உரையாற்றினார். இந்நிகழ்ச்சி சமூக பணித்துறை பேராசிரியர் டாக்டர் டி கிப்ட்சன் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையில் சமூகப் பணித்துறை முதுகலை மாணவர்கள் அஸ்வின், ஆர்த்தி, அபிநயா, ரதிநித்தா, ஜெய்சன் மற்றும் அபிஷியா ஆகியோரின் ஒருங்கிணைப்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் குழந்தைகளின் கல்விக்கான உரிமை, பாதுகாப்பு, அவர்களுக்கான உதவி எண் 1098 குறித்து குழந்தைகளுக்கு புரியும் வகையில் மிக எளிமையாக விழிப்புணர்வு உரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. அதற்கான பரிசினை சிறப்பு விருந்தினர் ஆர் கௌசல்யா குழந்தைகளுக்கு வழங்கினார். இறுதியாக பள்ளிக் குழந்தைகள் கட்டாயம் கல்வி கற்போம் என்றும் எங்கள் உரிமைகள் அறிந்து செயல்படுவோம் என்றும் உறுதியளித்து தங்களது விரல் ரேகைகளை குழந்தைகளின் உரிமைகளை காப்போம் என்ற வாசகத்தின் கீழ் பதாகைகளில் பதிவு செய்தனர். இந்நிகழ்ச்சி பள்ளி குழந்தைகள் கட்டாயம் கல்வி கற்கவும், அதன் முக்கியத்துவம் அறிந்து பாதுகாப்பான சூழலில் தங்களது உரிமைகளோடு செயல்பட ஊக்கத்தை அளித்தது.
0 Comments