ஐயோர்டா ( iORTA) சார்பில் திருச்சியில் அமைந்துள்ள சிட்டி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான பிரேத்யேக கிட்னி மாற்று சிகிச்சை மையத்தை கைட் (“KiTES” - Kids Kidney Transplant Clinic)தொடங்கியுள்ளது . தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான கிட்னி மாற்று சிகிச்சை சேவைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், இந்த முயற்சி கருதப்படுகிறது. பொருளாதார நிலைமையைப் பொருட்படுத்தாமல், மருத்துவ அவசியத்தின் அடிப்படையில் மட்டுமே குழந்தைகள் உயிர்காக்கும் சிகிச்சையைப் பெற வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் மையக் கருத்தாகும்.
இந்தத் தொடக்க விழாவில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. V. பாலகிருஷ்ணன், IPS அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, மையத்தைத் தொடங்கி வைத்தார். கௌரவ விருந்தினராக ராயல் பேர்ல் மருத்துவமனைகள் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் T. N. ஜனகிராம் அவர்கள் கலந்துகொண்டார்.
KiTES திட்டம், குழந்தைகளுக்கான கிட்னி மாற்று சிகிச்சையில் முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ மதிப்பீடு, தானதாரர் ஆய்வு, கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய திட்டமிட்ட கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான சிகிச்சை முறையாக இது செயல்படும்.
தொடக்க விழாவில் பேசிய திரு. V. பாலகிருஷ்ணன், IPS அவர்கள், அனைவருக்கும் சமமான சுகாதார சேவைகள் என்பது நீதியான சமூகத்தின் அடித்தளமாகும். KiTES போன்ற முயற்சிகள், உயிர்காக்கும் மருத்துவ சேவைகள் எந்தக் குழந்தைக்கும் பொருளாதார காரணங்களால் மறுக்கப்படக் கூடாது என்பதை உறுதிப்படுத்துகின்றன. மருத்துவ அவசியத்தையே முதன்மையாகக் கொண்டு செயல்படும் இந்த முயற்சி, குழந்தை சுகாதாரத்தில் ஒரு வலுவான முன்னுதாரணமாக திகழ்கிறது என்று தெரிவித்தார்.
மருத்துவ அவசரத் தேவையை விளக்கி, ஐயோர்டா நிறுவனத்தின் தலைமை மாற்று சிறுநீரக நிபுணர் டாக்டர் பிரபு காஞ்சி அவர்கள் பேசுகையில், நீண்டகால சிறுநீரக நோய் என்பது இந்தியக் குழந்தைகளின் வாழ்க்கையை மெல்ல மறைவாகப் பாதித்து வரும் ஒரு பெரும் சுகாதார சவாலாக உள்ளது. ஒரு மில்லியன் குழந்தைகளில் சுமார் 49,000 குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் பலருக்கு இறுதிக்கட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை உருவாகிறது.
சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால், நீண்டகால டயாலிசிஸ், உடல் மற்றும் மன வளர்ச்சி பாதிப்பு, மேலும் உயிருக்கு ஆபத்து போன்ற தீவிர விளைவுகள் ஏற்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 750 குழந்தைகள் புதியதாக சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர்.
KiTES திட்டத்தின் மூலம், ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, கிட்னி மாற்று சிகிச்சை வழங்கி குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை மீண்டும் வழங்குவதே எங்களின் உறுதியான இலக்காகும் என்று கூறினார்.
ராயல் பேர்ல் மருத்துவமனைகள் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் T. N. ஜனகிராம் அவர்கள்,
திருச்சி சிட்டி மருத்துவமனையில் KiTES மையம் தொடங்கப்பட்டிருப்பது, இந்தப் பகுதியில் குழந்தைகளுக்கான கிட்னி மாற்று சிகிச்சை சேவைகளில் ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும். சிறப்பு சிறுநீரக மருத்துவ அறிவு, மேம்பட்ட அறுவைச் சிகிச்சை திறன் மற்றும் திட்டமிட்ட சிகிச்சைக்கு பின்தொடர்பு பராமரிப்பு ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்கள் சொந்த ஊரிலேயே உலகத் தரமான சிகிச்சையைப் பெற முடியும் என்றார்.
ஐயோர்டா நிறுவனத்தின் நேரடி கிட்னி மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் கபாலி நீலமேகம் அவர்கள்,
அறுவைச் சிகிச்சை தொழில்நுட்பங்களிலும், அறுவைச் சிகிச்சைக்கு முன் மற்றும் பிந்தைய பராமரிப்பிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் பல்துறை மருத்துவ அணுகுமுறையுடன் இணைக்கப்படும்போது, குழந்தைகளுக்கான கிட்னி மாற்று சிகிச்சையில் நீண்டகால வெற்றியும் சிறந்த மருத்துவ முடிவுகளும் கிடைக்கின்றன என்று வலியுறுத்தினார்.
KiTES திட்டத்தின் மூலம், நோயறிதல் மற்றும் உறுதியான சிகிச்சை இடையிலான இடைவெளியை குறைத்து, நீண்டகால டயாலிசிஸ் மீது உள்ள சார்பை தாழ்த்தி, குழந்தைகளின் உயிர்வாழ்வு விகிதம், உடல் வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஐயோட்டா நிறுவனம் நோக்கம்கொண்டுள்ளது.
திருச்சியை தொடக்கமாகக் கொண்டு, இந்த KiTES திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் மற்றும் அதற்கும் அப்பால் விரிவுபடுத்தக்கூடிய ஒரு மாதிரி திட்டமாக உருவாக்க ஐயோர்டா திட்டமிட்டுள்ளது.
பொருளாதார தடைகள் காரணமாக எந்தக் குழந்தையும் உயிர் வாழும் வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதே இந்த முயற்சியின் இறுதி இலக்காகும்.
0 Comments