நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் மசோதாவை திரும்ப அனுப்பிய ஆளுநரை கண்டித்தும் கருப்பு முககவசம் அணிந்து SIO அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை ஐந்து மாதங்களுக்குப் பின்பு மீண்டும் தமிழக அரசிடம் ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். இது தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து அவரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு திருச்சி மாவட்டம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஐந்து மாதங்கள் கழித்து மீண்டும் திருப்பி தமிழக அரசுக்கு அனுப்பிய ஆளுநரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் அவரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி பாலக்கரை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் ஷபீர் அகமது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். "BAN NEET" என்ற வாசகத்துடன் கருப்பு முக கவசம் அணிந்து கொண்டும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
0 Comments