சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017ஆம் ஆண்டு தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் தண்டனை முடிந்து 2021 ஜனவரி மாதம் விடுதலையானார்.
இதையடுத்து, சசிகலா சிறையில் இருந்தபோது அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை என கர்நாடக அரசு நியமனம் செய்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினோத்குமார் தலைமையிலான உயர்மட்ட குழு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஏசிபி என்ற ஊழல் ஒழிப்பு பிரிவில் 2018ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா தொடர்ந்த வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி முதற்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, சசிகலாவிடம் லஞ்சம் பெற்றதாக தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளர் அனிதா, காவலர் சுரேஷ், கஜராஜ் மகனுார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியது. இதுகுறித்து ஜனவரி 7ஆம் தேதி இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் சசிகலா, இளவரசி ஆகியோர் குறித்து குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது. மீண்டும் இந்த வழக்கு சூடு பிடித்துள்ளதால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறையில் சொகுசாக இருக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக வழக்கில், சசிகலா நீதிமன்றத்தில் ஆஜராக பெங்களூரு சென்றார். சசிகலா மற்றும் இளவரசியும் இன்று அதிகாலை சென்னையில் இருந்து பெங்களூரு சென்றுள்ளனர்.
0 Comments