NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** பிறந்து சில நாட்களே குழந்தைகளுக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை திருச்சி மா காவேரி மருத்துவமனை சாதனை

பிறந்து சில நாட்களே குழந்தைகளுக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை திருச்சி மா காவேரி மருத்துவமனை சாதனை

தென் தமிழகத்தில் முதன்முறையாக பிறந்த சில நாட்களே ஆன 2 பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை செய்து மா காவேரி மற்றும் காவேரி ஹார்ட்சிட்டி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர் காவேரி மருத்துவமனை


திருச்சி காவேரி மருத்துமனையின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டி.செங்குட்டுவன் நிருபர்களிடம் கூறியதாவது:-


காவேரி மருத்துவமனையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல பிரிவான மா காவேரியில், பிறந்து 48 மணி நேரமே ஆன, 2 கிலோ எடையுள்ள பெண் குழந்தை ஒன்றின் இதய வால்வு மிக சுருங்கிய நிலையில் இருந்தது. இந்த சிக்கலான இதய பிரச்சினையால் குழந்தைக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கவில்லை. அதே போல், பிறந்து 11 நாட்களான, 1.5 கிலோ எடையுள்ள பெண் குழந்தைக்கு ரத்த ஓட்டத்தை பாதிக்கும் இதய பிரச்சினை இருந்தது


இந்த 2 குழந்தைகளுக்கும் காவேரி மருத்துவமனையின் மா காவேரி மற்றும் காவேரி ஹார்ட்சிட்டியை சேர்ந்த குழந்தை இதயவியல் மருத்துவக்குழு ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளித்து குணப்படுத்தி சாதனை படைத்துள்ளது. இச்சிகிச்சைகளுக்கு தொடை பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் மூலம் சிறிய, துல்லியமான தோல் திறப்புகள் மட்டுமே தேவைப்படும்..


பிறந்து 48 மணி நேரமே ஆன குழந்தைக்கு, இதயம், நுரையீரலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் வால்வு வெகுவாக குறுகியிருந்தது. இதனால் குழந்தை போதுமான ஆக்சிஜனை பெற சிரமப்பட்டது. அந்த குழந்தைக்கு பலூன் பல்மோனரி வால்வுலோபிளாஸ்டி எனப்படும் உயிர்காக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஒரு சிறிய பலூன் தொடையில் உள்ள ரத்த குழாய் வழியாக செலுத்தப்பட்டு குழந்தையின் குறுகிய வால்வு விரிவாக்கப்பட்டது. குழந்தை நல்ல முறையில் குணமடைந்து, பிறந்த 5-வது நாளில் நல்ல ஆரோக்கியத்துடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.

அதுபோல், பிறந்து 11 நாட்களே ஆன மற்றொரு குழந்தை, தொடர்ச்சியான சுவாச பிரச்சினையால் அவதிப்பட்டது. மருந்துகள் கொடுத்தும் கூட இதயத்தில் இருந்த ஒரு அசாதாரண ரத்த நாளத்தால் செயற்கை சுவாசத்தின் துணை அதற்கு தேவைப்பட்டது. அதாவது பிறப்பிற்கு பிறகு மூட வேண்டிய இந்த ரத்த நாளம் மூடவில்லை. இதைத்தொடர்ந்து, பிக்கோலோ எனப்படும் 4x2 மி.மீ. அளவுள்ள ஒரு சிறிய சாதனம் மூலம் அந்த திறப்பு அடைக்கப்பட்டது. இதன்மூலம் குழந்தையின் சுவாசம் 48 மணி நேரத்திற்குள் சீராகி, விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.

இத்தகைய சிகிச்சை தென் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற சிகிச்சைக்கு சென்னை, கோவைக்கு செல்ல தேவையில்லை. சிறப்பாக சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்கள் வினோத்குமார், மணிராம்கிருஷ்ணா, கே.செந்தில்குமார் மற்றும் குழுவினரை இந்த தருணத்தில் பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது டாக்டர்கள் மற்றும் மருத்துவமனையின் முதுநிலை பொது மேலாளர் மாதவன் உடனிருந்தார்.

Post a Comment

0 Comments